காண்டூர் கால்வாயை புதுப்பிக்கும் பணி மும்முரம்


காண்டூர் கால்வாயை புதுப்பிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 28 Jun 2023 3:35 PM GMT (Updated: 29 Jun 2023 10:34 AM GMT)

காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்

காண்டூர் கால்வாய்

பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியாகவும் வனவிலங்குகளின் அட்சய பாத்திரமாகவும் காண்டூர் கால்வாய் விளங்கி வருகிறது. அப்பர்நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிகுளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தை அடைகிறது.

அதன் பின்பு காண்டூர் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரானது மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதி வழியாக 49.300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருமூர்த்தி அணையை வருகின்றது.

3¾ லட்சம் ஏக்கர் பாசனம்

ஆண்டுதோறும் ஜூலை 15 முதல் அடுத்த ஆண்டு மே 15 வரையிலும் 10 மாதங்கள் தண்ணீர் வரத்து இருக்கும் வகையிலும் 1150 கனஅடி தண்ணீரை சுமந்து செல்லும் வகையிலும் காண்டூர் கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் தயவால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இவற்றில் அம்மாபட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுகுளம் உள்ளிட்ட ஏழுகுளங்கள் பாசனமும் அடங்கும். அதுதவிர உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், கொமரலிங்கம், குடிமங்கலம் மற்றும்பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருவதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும்.

பக்கவாட்டு சுவர்கள் சேதம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய ஆதாரங்களில் காண்டூர் கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

கால்வாய் வனப்பகுதியின் அடிவாரத்தில் கட்டப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீரில் அடித்து வரப்படுகின்ற மண், பாறைகள் அதில் விழுவதால் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைகிறது. இதனால் ஆங்காங்கே கற்களும், பாறைகளும் கால்வாயில் நிறைந்து காணப்படுவதுடன் பக்கவாட்டு சுவர்களின் சேதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதனால் கால்வாயில் முழுமையான அளவு தண்ணீர் கொண்டுவர முடியாத சூழல் நிலவுவதால் அணை விரைவில் நிரம்புவதில்லை. அதைத்தொடர்ந்து கால்வாயில் விழுந்துள்ள பாறைகளை அகற்றி சேதமடைந்த பக்கவாட்டு சுவரையும் சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதன்பேரில் காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் தொடங்கி அதிகாரிகள் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பணியை விரைந்து முடித்து 4- ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.


Next Story