ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை


ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 10:31 AM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில்தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றிலுள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

பா.ஜ.க.வினர் போராட்டம் அறிவிப்பு

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். கைலாசநாதர் கோவிலில் பழுதடைந்த தேருக்கு பதிலாக புதிய தேர் செய்து ரதவீதியை சுற்றிவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும், தாமிபரணி ஆற்றுக்குள் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.

சமாதான கூட்டம்

இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், மண்டல துணை தாசில்தார் சுடலை வீரபாண்டியன், வருவாய் ஆய்வாளர் வடிவு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருவேல மரங்களை...

கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றுப்படுகையிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வனத்துறையினரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை ஒத்திவைப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.


Next Story