கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: ஈ.சி.ஆரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: ஈ.சி.ஆரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
x

4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

சென்னை,

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியையொட்டி, சென்னை ஈ.சி.ஆரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் வழியை பயன்படுத்தி கொள்ளவும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story