கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை


கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை
x

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த மனு தொடர்பாக அக்.10-ம் (அதாவது இன்று) தேதிக்குள் பதில் அளிக்க தனபாலுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைக்கால தடை உத்தரவை நிரந்தர தடையாக மாற்றி ஆவணங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story