கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 28 July 2023 5:58 AM GMT (Updated: 28 July 2023 6:11 AM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். வழக்கு விசாரணையில் வாளையார் மனோஜ் கோர்ட்டில் ஆஜரானார். இறுதியில் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். கோடநாடு வழக்கில் இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.


Next Story