தர்மபுரியில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


தர்மபுரியில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 7:00 PM GMT (Updated: 6 July 2023 7:27 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தர்மபுரி வக்கீல் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தர்மபுரி தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மூத்த வக்கீல் அப்புனு கவுண்டர் தலைமை தாங்கினார்.

தர்மபுரி வக்கீல் சங்கத்தலைவர் சந்திரசேகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பாதுகாப்பு சட்டம்

தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை பார் கவுன்சில் திரும்ப பெற வேண்டும். வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வக்கீல்களின் சேமநலநிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் வக்கீல் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், மாதேஷ், முத்துசாமி, பூவன், முனியப்பன் உள்பட பொறுப்பாளர்கள், முன்னாள் நிர்வாகிகள், வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story