உடல் நலக்குறைவால் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்


உடல் நலக்குறைவால் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்
x
தினத்தந்தி 18 Aug 2022 8:19 AM GMT (Updated: 18 Aug 2022 8:34 AM GMT)

உடல் நலக்குறைவால் தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்.

சென்னை

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார்.

நெல்லை கண்ணன். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார்.

குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார்.

77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர்.

தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்டவர்.


Next Story