ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்


ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்
x

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

ஈரோட்டில் பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் என 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அங்கு சுமை தூக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் கடந்த 6 ஆண்டுகளாக உடன்பாடு ஏற்படாததை கண்டித்தும், பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 13-ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை அனுப்ப முடியாமல் வணிகர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை குடோன்களிலேயே அடுக்கி வைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக மஞ்சள், எண்ணெய் வகைகள், ஜவுளிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

கலெக்டரிடம் மனு

இந்தநிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்க உள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர் மத்திய சங்க பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் கூறியதாவது:-

ஈரோட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

19-ந் தேதி

இந்த போராட்டம் காரணமாக ஈரோட்டில் இருந்து மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ரூ.300 கோடிக்கும் மேலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன. வருகிற 19-ந் தேதி (நாளை மறுநாள்) வரை போராட்டம் நடக்கிறது.

இந்தநிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நாளை (அதாவது இன்று) கோரிக்கை மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story