சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: ஈரோட்டில் ரூ.200 கோடி ஜவுளி, மஞ்சள் உள்பட சரக்குகள் தேக்கம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: ஈரோட்டில் ரூ.200 கோடி ஜவுளி, மஞ்சள் உள்பட சரக்குகள் தேக்கம்
x

கூலி உயர்வு கேட்டு, சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோட்டில் ரூ.200 கோடி ஜவுளி, மஞ்சள் உள்பட பல்வேறு சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

ஈரோடு

கூலி உயர்வு கேட்டு, சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோட்டில் ரூ.200 கோடி ஜவுளி, மஞ்சள் உள்பட பல்வேறு சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

கூலி உயர்வு

ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகிறார்கள். புக்கிங் அலுவலகம் மூலம் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டு தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஈரோட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு, பிற சலுகைகளை ஒப்பந்தம் செய்கின்றனர். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே தற்போது வழங்கும் கூலியில் இருந்து 41 சதவீதம் உயர்வு, இரவு 8 மணிக்கு மேல் பொருட்கள் ஏற்றி, இறக்குவதாக இருந்தால் இரவு சாப்பாட்டுக்கு ரூ.75 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

2-வது நாளாக போராட்டம்

இதனை சில லாரி நிறுவனங்கள் ஏற்றாலும், கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபற்றி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.

இதனால் நேற்று முன்தினம் முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதையொட்டி தமிழக பொது தொழிலாளர்கள் மத்திய சங்க தலைவர் மனோகரன் தலைமையில் ஈரோடு பார்க் ரோட்டில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.200 கோடி பொருட்கள் தேக்கம்

இது குறித்து தமிழக பொது தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு கூறியதாவது:-

கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் கூலி உயர்வு வழங்க முன்வராததால் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் போடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

ஒரு டன் லோடு ஏற்ற ரூ.120 தருகின்றனர். இதனுடன் சேர்ந்து 41 சதவீத கூலி உயர்வு கேட்டுள்ளோம். இந்த போராட்டத்தால் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான ஜவுளி, மஞ்சள், உணவு பொருட்கள், விளை பொருட்கள், கால்நடை தீவனங்கள் என பல்வேறு சரக்குகளை ஏற்றி, இறக்க முடியவில்லை. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் குடோன்களிலும், லாரிகளிலும் தேக்கம் அடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் சி.ஐ.டி.யு. தலைவர் தங்கவேலு, தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆறுமுகம், விஜயகுமார், ராஜூ, கோபால் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story