தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை...!


தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை...!
x

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து 10-ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். விழா பந்தலில் காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு ஆராதனை விழா பந்தலில் 500-க்கு மேற்பட்ட கர்நாட இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அதை தொடர்ந்து 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பாடுகிறார். இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11-ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story