மக்கள் மனதில் தாமரை ஆழமாக பதிந்துவிட்டது - சரத்குமார் பேச்சு


மக்கள் மனதில் தாமரை ஆழமாக பதிந்துவிட்டது - சரத்குமார் பேச்சு
x

பிரதமர் மோடியின் ரசிகனாக பயணித்த நான் தற்போது தொண்டனாக இணைந்திருக்கிறேன் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

குமரி,

கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-

சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜனதாவுடன் இணைத்து என்னுடன் பயணித்த சகோதர- சகோதரிகள் ஓர் உடலாக ஏற்ற பிறகு நான் பேசும் கன்னிப்பேச்சு இது. நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் கன்னிப் பேச்சை பேசிய நான் இங்கு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கன்னிப் பேச்சை பேசுகிறேன்.

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என்று கருத்து இருக்கிறது. இந்த கருத்துக்களை தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் சிறப்பாக, ஆழமாக பதிய வைப்பேன். எடுத்த காரியத்தை முடிக்காமல் நான் இருந்ததில்லை. அப்படியானால் ஏன் எடுத்த காரியத்தை முடிக்காமல் கட்சியை இணைத்துவிட்டீர்கள்? என்று கேட்பீர்கள்.

ஊழலற்ற மற்றும் மக்களின் மனதை அறிந்த தலைவர் நாட்டுக்கு தேவை. எந்த ஒரு சுயலாபமும் இல்லாமல் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் ஊழலாட்சிகள் அகற்றப்பட வேண்டும். 57 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்துவிட்டார்கள். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் என பேசி குடும்ப ஆட்சியும், மன்னராட்சியும் தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் மனதில் ஆழமாக தாமரை பதிந்துவிட்டது. பிரதமர் மோடியின் ரசிகனாக பயணித்த நான் தற்போது தொண்டனாக இணைந்திருக்கிறேன். ஒருமுறை நான் அவரிடம் பேட்டி எடுத்தபோது இருந்த அதே உந்துதல் இப்போதும் அவரிடம் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான காலகட்டம் இது. உழைப்பால் அனைத்தையும் உடைத்தெறிந்த தலைவர் நரேந்தர மோடி.

எனவே அவர் 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும், அதற்காக தாமரை ஒவ்வொரு மாநிலங்களிலும் மலர வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story