மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்..!


மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்..!
x

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் 4500 பேர், பொறியியல் பிரிவு பணியாளர்கள் 1500 பேர் என சுமார் 6000 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.கொரோனா கால ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

இதையொட்டி மதுரை தொழிலாளர் நலத்துறை மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை. அதன் பின்னர் 2-ம் கட்டமாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

மேயர் இந்திராணி தலைமையில் 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அம்சராஜ், பூமிநாதன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி பணியாளர்கள் நலன் தொடர்பான பேச்சுவார்த்தையை ஆணையர் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு, தொழிற்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கூட்டத்திலும் எந்தவித முடிவும் எட்டப்ப டவில்லை.

இதுபற்றி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், தூய்மை பணியாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 3-ம் கட்ட மாக நடந்த பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் அடைப்பு சரி செய்தல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்தல் வெகுவாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story