போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை...!


போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை...!
x

வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது.

ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை முடிந்து பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.

அதன்படி இன்று மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.


Next Story