பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி


பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி
x

பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவள்ளூர்

பூந்தமல்லி அடுத்த சொக்கநல்லூரை சேர்ந்தவர் ராஜி (வயது 48), தனியார் ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலை முடித்து விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே வரும் போது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென பின் நோக்கி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மொபட் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் ராஜி மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்தும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன ராஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story