வருகிற 16-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையிலான மலை ரெயில் சேவை ரத்து..!


வருகிற 16-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையிலான மலை ரெயில் சேவை ரத்து..!
x
தினத்தந்தி 10 Nov 2023 2:23 AM GMT (Updated: 10 Nov 2023 2:26 AM GMT)

குன்னூர் மலைரெயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலைரெயில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் மலைரெயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளன. இதன்காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையிலான மலை ரெயில் சேவை வருகிற 16-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.


Next Story