

மணலி கே.கே.தாழை பகுதி அண்ணா தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக பெரோக்கா கிறிஸ்தவ சபை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிறிஸ்தவ சபை அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைக்க வந்தனர்.
இது பற்றி அறிந்த பெண்கள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் சபைக்கு வந்தனர். அவர்கள் சபைக்கு 'சீல்' வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சபையில் இருந்து வெளியேறினர். அப்போது சில பெண்கள் கண்ணீருடன் வெளியேறினர். அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் பெரோக்கா கிறிஸ்தவ சபைக்கு 'சீல்' வைத்தனர்.