லாரி டிரைவர் இறப்பில் நீடிக்கும் மர்மம்


லாரி டிரைவர் இறப்பில் நீடிக்கும் மர்மம்
x

திருச்சுழி அருகே வீட்டில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவர் இறப்பில் மர்மம் நீடிக்கிறது. விடியும் வரை வாசலில் மனைவி காத்திருந்தது ஏன்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே வீட்டில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவர் இறப்பில் மர்மம் நீடிக்கிறது. விடியும் வரை வாசலில் மனைவி காத்திருந்தது ஏன்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர்

திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது35). இவர் தனியார் கல்குவாரியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த அழகியவள்ளி (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆதலால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அழுகிய நிலையில் உடல்

அதன்பின்னர் திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவரது வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருக்கண்ணன் வீட்டு ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது அவர் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது திருக்கண்ணன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

ெகாலையா?

உடனே தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொைல செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அழகியவள்ளியிடம் திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவத்தன்று தனக்கும், கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் நான் வீட்டு வாசலில் தான் விடியும் வரை காத்திருந்தேன். பின்னர் ஆட்டோவில் ஏறி எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன், எனது கணவர் எப்படி இறந்தார் என்பது எனக்கு தெரியாது என அழகியவள்ளி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சம்பவத்தில் திருக்கண்ணன் சாவுக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story