சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு


சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 10:20 AM GMT)

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே 4 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே குமாரபுரம் முத்துப்பாண்டி மகன் மகேஷ் (வயது 31). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவரது மனைவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக குமாரபுரத்தில் இருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கினார்

சாத்தான்குளம் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டாடார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தையை பார்க்க ஆவலுடன் சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story