ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை:இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை


ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை:இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை
x

ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறையால் இருதரப்பினர் இடையே கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

அமைதி பேச்சுவார்த்தை

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையைச் சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஜேடர்பாளையத்தில் கபிலர்மலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் இரு பிரிவினர்களுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் அருகே எம்.குன்னத்தூர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடவடிக்கை

ஜேடர்பாளையம் பகுதியில் மேற்படி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்படின் உடனடியாக 94981 81340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்று இரு சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்சினையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உமா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ், உதவி இயக்குனர் (ஊராட்சி) அசோக்குமார், போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story