நெம்மேலி திட்டத்தால் 9 லட்சம் மக்கள் பயன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நெம்மேலி திட்டத்தால் 9 லட்சம் மக்கள் பயன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

நெம்மேலி சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெம்மேலி,

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக, பிரமாண்டமாக செய்யக்கூடியவர். நாம் செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போட்டால் இன்று ஒரு நாள் போதாது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நிதி நெருக்கடியிலும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், வட சென்னை மக்கள் பயன்பெறுகின்றனர்.

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவர். இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது கடல்நீரை குடிநீராக்கும் நிலையம். மடிப்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட 12 இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும்.

இந்தியாவிலேயே கடல்நீரை குடிநீராக்கும் பெரிய நிலையம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது; சென்னை மாநகராட்சியில் ரூ.70 கோடி மதிப்புள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கடும் நெருக்கடியில் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்பணிகளை பட்டியலிட ஒரு நாள் போதாது. சென்னையில் மேம்பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் தி.மு.க. ஆட்சியில்தான் உருவானது. வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு தி.மு.க. அரசு கிடையாது

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story