பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!


பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!
x

திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புகிடங்கு திறந்து வைக்கப்பட்டது.

சென்னை,

பால்வளத் துறை சார்பில் ஈரோட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதேபோல், தருமபுரியில் அலுவலகத்துடன் கூடிய பால் கொள்முதல் பிரிவுக் கட்டிடம், திருவண்ணாமலையில் பால் பவுடர் ஆலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புக் கிடங்கு, திருப்பூர் மாவட்டப் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கான அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பால்வளத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story