ஆண்டுக்கு ஒரு நாள் அருமை மிகு திருநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!


ஆண்டுக்கு ஒரு நாள் அருமை மிகு திருநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!
x
தினத்தந்தி 14 Jan 2024 9:03 AM GMT (Updated: 14 Jan 2024 11:17 AM GMT)

தை முதல் நாள் உழைப்பின் திருநாள் தமிழர் திருநாளாக கொண்டாடி வருகிறோம்.

சென்னை,

பொங்கல் திருநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில்,

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் தாய் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஆண்டுக்கு ஒரு நாள் அருமை மிகு திருநாள் பொங்கல் புது நாள் நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

களம் காண்பான் வீரன் என்றால் நெற்களம் காண்பான் உழவன் மகன் போர் மீது செல்லுதலே வீரன் வேலை வைக்கோல் போர் மீது உறங்குதலே உழவன் வேலை உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. வேற்றுமையோ ஒன்றே ஒன்று உழவன் வாழவைப்பான் வீரன் சாக வைப்பான் என்று எழுதினார் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

உழவு என்பது தமிழர் குல தொழில் மட்டுமல்ல பண்பாட்டு மரபு அதனால்தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகிறோம். தை முதல் நாள் உழைப்பின் திருநாள் தமிழர் திருநாளாக கொண்டாடி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக திமுகவின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லக்கூடிய வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, சொல்லாத பல திட்டங்களை செய்து காட்டி, சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர்க்கு விடியில் பயணம், கொரோனா காலத்தில் எல்லா குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய், வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் , கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் , எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் செப்டம்பர் மாதம் முதல் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

பெரும் நிதி நெருக்கடிக்கு இடையில் பொங்கல் பரிசு தொகுப்பாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் மனதில் மகிழ்ச்சியை பொங்க வைத்துள்ளது இந்த அரசு. பால் பொங்குவது போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கின்றேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி, உங்கள் மனதில் ஏற்படும் சிறப்பு தான் என்னுடைய பூரிப்பு, என் பேரன்பிற்குரிய தமிழகத்தின் உடன் பிறப்புகளே,

அன்பு பொங்க, ஆசை பொங்க , இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க, நீதி பொங்க, ஊரே பொங்க இனிய பொங்கல் வாழ்த்துகள். இனிய பொங்கல் இந்தியாவுடைய பொங்கலாக மாறும் ஆண்டு இது. அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story