அண்ணாமலையுடன் எந்த பிரச்சினையும் இல்லை

அண்ணாமலையுடன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அக்காள், தம்பி போல் கட்சியை வளர்க்கிறோம் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
அண்ணாமலையுடன் எந்த பிரச்சினையும் இல்லை
Published on

கோவை

அண்ணாமலையுடன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அக்காள், தம்பி போல் கட்சியை வளர்க்கிறோம் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஆட்சிக்கு ஆபத்து

கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. துளிர் என்ற திட்டத் தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண மேடைகளை, எதிர்க்கட்சிகளை திட்டுவதற்காக பயன்படுத்துகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்ததுடன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறார். அவருக்கு எதற்காக இந்த பயம் வந்திருக்கிறது என்று தெரியவில்லை.

கற்பனை உலகம்

எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பா.ஜ.க.விற்கு விருப்பம் இல்லை. கலைத்ததும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்து உள்ளதாக முதல்-அமைச்சர் பேசுகிறார். உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

உண்மை இல்லை

தமிழகத்தில் ஆட்சியை நன்றாக நடத்த மு.க.ஸ்டாலின் முயற்சி செய்யவேண்டும். அவர், தமிழக கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கு எழுதி உள்ள கடிதம் முழுக்க கற்பனை. மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாசார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார். இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது.

கவர்னரை பற்றி எழுதியிருக்க கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவை இல்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

ஒரே கூட்டத்தில் பங்கேற்பு

மாநிலத்தில் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்து செய்திக்குறிப்பாக வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெளியாகி வருகிறது. ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலு வலகம் பதில் தருவதால் உங்களுக்கு எரிச்சல் வந்து இருக்கிறதா?.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அக்காவும், தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கிறோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது நான் இல்லாமல் இருப்பது போன்ற சூழல் இருக்கிறது. இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்க திட்டமிடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com