சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்


சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா, தாளடி பயிர் காப்பீடு

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.தற்ேபாது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு(2023-2024) சம்பா, தாளடி பருவத்தில் இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனத்தின் மூலம் பயிர்காப்பீடு செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய கிராம அளவில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரீமியத்தொகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 282 கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சம்பா, தாளடி நெற்பயிருக்கு பிரீமியத்தொகை ஏக்கருக்கு ரூ.541.50 செலுத்த வேண்டும்.

அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கிராமங்களை சேர்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். மற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

சரிபார்க்க வேண்டும்

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்(பசலி-1433), வங்கிகணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொண்டு அதற்கான ரசீதை பதிவு செய்த இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால் காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரி செய்து கொள்ளலாம்.

நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், முன்கூட்டியே பதிவு செய்து பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி எண். 9345738118 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story