காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Aug 2023 5:00 AM GMT (Updated: 25 Aug 2023 6:02 AM GMT)

காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்ட நிலையில், 'தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பினை அவமதிப்பதாகும்.

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 55.83 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.

இந்தக் கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களிடம் பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர், இனியும் தண்ணீர் கொடுக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதற்காக வழக்கம்போல், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு உரிய காவேரி நீரை திறந்து விட்டால்தான் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறுமேயானால், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் உடனடியாக கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு உண்டு. ஆனால், அதைச் சொல்ல தி.மு.க. தயங்குகிறது. இது தமிழ்நாட்டிற்கு எதிரான செயல். காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

தி.மு.க. அரசு தனது பொறுப்பினை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துரைக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story