கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 8 கிராமங்களில் கடைகள் அடைப்பு


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 8 கிராமங்களில் கடைகள் அடைப்பு
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்காலாக இருப்பது கீழ்பவானி வாய்க்கால். இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருபுறமும் உள்ள கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்த பகுதி விவசாயிகள் அங்கு திரண்டு சென்று கான்கிரீட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அங்கு எந்த பணிகளும் நடைபெற கூடாது என்று அங்கேயே பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். நேற்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.

கடைகள் அடைப்பு

இந்தநிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு செய்யப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று எலத்தூர் செட்டிபாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், அரசூர், குருமந்தூர், கரட்டுபாளையம் உள்பட அந்த பகுதியில் உள்ள 8 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

பால், மருந்து என அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருந்தன. கடையடைப்பு காரணமாக கிராமங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்தநிலையில் நேற்று கோபிசெட்டிபாளையம் பொதுப்பணி துறை அதிகாரி ஆனந்தராஜ், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தங்கவேல், நம்பியூர் தாசில்தார் மாலதி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் விவசாயிகளிடம், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை விளக்கினார்கன். ஆனால் விவசாயிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண்ணை போட்டு மூடவேண்டும். வாய்க்காலின் எந்த பகுதியிலும் கான்கிரீட் பணிகள் செய்யக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் அங்கே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story