குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம்: வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடரலாம் - மதுரை ஐகோர்ட்டு


குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம்: வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடரலாம் - மதுரை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 4 Sep 2023 8:04 AM GMT (Updated: 4 Sep 2023 8:10 AM GMT)

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை,

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது எனவும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார். இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும்.

மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல், கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story