

ஆத்தூர் வட்டாரத்தில் சுமார் 3 ஆயிரத்து 945 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னை உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குறைந்த காய்க்கும் திறன் மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக புதிதாக தென்னங்கன்றுகள் நடுவதற்காக ஒரு தென்னைக்கு ரூ.1,000 வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் அய்யம்பாளையம், பாறைப்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட இடங்களில் தென்னை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அய்யம்பாளையத்தில் நடவு செய்யப்பட்டுள்ள தென்னை மரக்கன்றுகளை கொச்சி தென்னை வளர்ச்சி வாரிய முதன்மை அதிகாரி ஹனுமந்தகவுடா நேற்று ஆய்வு செய்தார். மேலும் அவர் தென்னை விவசாயிகளிடம் குறைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சென்னை வேளாண்மை துறை இயக்குனர் சித்ரா, சென்னை மண்டல தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாளி, வேளாண் விஞ்ஞானி பாலகும்பகன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமலா, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, ஆத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர். இதேபோல் பாறைபட்டி, போடிகாமன்வாடி ஆகிய பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.