செலவுக்கு பணம் தர மறுத்த மூதாட்டி அடித்துக்கொலை


செலவுக்கு பணம் தர மறுத்த மூதாட்டி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 9 July 2023 7:15 PM GMT (Updated: 10 July 2023 9:21 AM GMT)

நீடாமங்கலம் அருகே செலவுக்கு பணம் தரமறுத்த மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய பேரனை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

பணம் கேட்டு தகராறு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி குடியானத்தெருவில் வசித்து வந்தவர் சிந்தாமணி (வயது73). இவருடைய மகன் ராஜேந்திரன். மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் ஏசுராஜா (30). இவர்கள் அனைவரும் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர்.

ஏசுராஜா அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏசுராஜா நேற்று மாலை தனது பாட்டி சிந்தாமணியிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

கட்டையால் அடித்துக்ெகாலை

பணம் கொடுக்க சிந்தாமணி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏசுராஜா தனது பாட்டி சிந்தாமணியை கட்டையால் பின்மண்டையில் அடித்துள்ளார். இதில் துடிதுடித்த சிந்தாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஏசுராஜா அங்கிருந்து தலைமறைவானார்.

இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிந்தாமணியின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த ஏசுராஜாவை கைது செய்தனர். செலவுக்கு பணம் தர மறுத்த மூதாட்டியை பேரனே அடித்துக்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story