செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே: வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி சாவு - 7 பேர் கோர்ட்டில் சரண்


செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே: வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி சாவு - 7 பேர் கோர்ட்டில் சரண்
x

செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் 7 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்-இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 32). இவர் மீது தாம்பரம், ஓட்டேரி பகுதிகளில் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் மீது உள்ள கொலை வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று முன்தினம் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வந்தார்.

கோர்ட்டு வளாகம் எதிரே உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் லோகேஷ் அமர்ந்திருந்த டீக்கடையை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியது.

வெடிகுண்டு வெடித்ததையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது லோகேஷை குறி வைத்து துரத்திச்சென்ற மர்ம நபர்கள் அவரது தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகேஷை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர், இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் லோகேஷ் உயிரிழந்தார்.

லோகேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய தாம்பரத்தை சேர்ந்த ராகுல் (27), தனசேகரன் (25), பிரவீன் குமார் (23), லோகேஷ் (27), அரவிந்த் குமார்(25), ரூபேஷ் (22), சாம்சன் மோகஸ் (26) ஆகியோர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் கோர்ட்டு எண் ஒன்றில் சரணடைந்தனர்.


Next Story