பூந்தமல்லி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்


பூந்தமல்லி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
x

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் சந்தோஷ் (வயது 23), லேத் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ரஞ்சித் (22), இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்து இருந்தார். பூந்தமல்லி அருகே பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது ரஞ்சித் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

வாலிபர் மூளைச்சாவு

இதில் நிலை தடுமாறி சந்தோஷ், ரஞ்சித் இருவரும் கீழே விழுந்ததில் சந்தோசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த சந்தோசை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில் இறந்து போன சந்தோசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story