நெல், மிளகாய், வாழை பயிரை காப்பீடு செய்யலாம்


நெல், மிளகாய், வாழை பயிரை  காப்பீடு செய்யலாம்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:45 PM GMT)

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், மிளகாய், வாழைக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், மிளகாய், வாழைக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி திட்டம்

கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு ஆண்டில் நெல், மிளகாய், நிலக்கடலை, வாழை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்திட இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ராபி பருவ பயிர்களுக்கு நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.30,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரீமியமாக ரூ460.50 செலுத்த வேண்டும். காப்பீடு பதிவிற்கான கடைசி நாள் நவம்பர் 15-ந் தேதி ஆகும்.

பயிர் காப்பீடு

நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.18,050 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியமாக ரூ.270.75 செலுத்த வேண்டும். பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி டிசம்பர் 30 ஆகும். மிளகாய்க்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.25,350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியமாக ரூ1267.50 செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த கடைசி தேதி 2024 ஜனவரி 31 ஆகும்.

சின்ன வெங்காயத்திற்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.29 ஆயிரத்து 50 வழங்கப்படும். பிரீமியமாக ரூ.1452.50 செலுத்த வேண்டும். பயிர் காப்பீட்டிற்கு கடைசி தேதி 2024 ஜனவரி 31 ஆகும். வாழை பயிருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரத்து 600 வழங்கப்படும். பிரீமியமாக ரூ.2530 செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த கடைசி தேதி 2024 பிப்ரவரி 29 ஆகும்.

பயன்பெறலாம்

பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நடப்பு பருவ சாகுபடி அடங்கல் கருத்துரு படிவம், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகை செலுத்தி உரிய காலக்கெடுவுக்குள் தங்கள் பயிருக்கு காப்பீடு பதிவு செய்யலாம்.

எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை சரி செய்து கொள்ளலாம். மேலும் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு பதிவு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரிய காலக்கெடுவுக்குள் தங்களது நெல் பயிரினை காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story