புதிய விமான நிலையம் அமைக்கும் பிரச்சினையில் தி.மு.க அரசின் வாக்குறுதிகளை பரந்தூர் விவசாயிகள் நம்ப தயாராக இல்லை - அண்ணாமலை


புதிய விமான நிலையம் அமைக்கும் பிரச்சினையில் தி.மு.க அரசின் வாக்குறுதிகளை பரந்தூர் விவசாயிகள் நம்ப தயாராக இல்லை - அண்ணாமலை
x

புதிய விமான நிலையம் அமைக்கும் பிரச்சினையில் தி.மு.க. அரசின் வாக்குறுதிகளை பரந்தூர் விவசாயிகள் நம்ப தயாராக இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

வசைப்பாடும் தி.மு.க.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நமது மாநிலம் போற்றப்பட்ட காலங்கள் போய், வந்தாரை விரட்டும் தமிழ்நாடு என்று ஆனதற்கு தி.மு.க.விற்கு பெரும் பங்குள்ளது. அரசியல் உள்நோக்கங்கள் பல கொண்ட போராட்டங்களை ஊக்குவித்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு வர காரணமாக இருந்த தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து போராடுபவர்களை வசைபாடுவதைத் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தவறான முன்னுதாரணமாகத் திகழும் தி.மு.க. மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்யாமல் மக்களின் ஒரே குறையாக மாறியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. அமைச்சர் எ.வ.வேலு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்வதன் மூலமாக தி.மு.க. தலைவரின் அறிக்கையை அவரது கட்சிக்காரரே படிப்பதில்லை என்பது நிரூபணமாகிறது.

மக்கள் நம்ப தயாராக இல்லை

தி.மு.க. ஆட்சியின் கடந்த ஓர் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர்வாசிகள் பார்த்திருப்பார்கள். அதனால் தான் இன்றைக்கு தி.மு.க. அரசு நிலத்தை வழங்குகிறோம், இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க. அரசு பரந்தூர் மக்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?. அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக தி.மு.க. அரசு வழங்க வேண்டும். அவர்களுக்குச் சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேளுங்கள்.

2006-ம் ஆண்டு தி.மு.க. கொடுத்த 2 ஏக்கர் நிலம் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. தி.மு.க.வின் அந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றலாமே?.

பாடுபடுங்கள்

தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளை கண்ட பிறகாவது இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக தி.மு.க. பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story