பெற்றோர்கள் 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை


பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை
x

மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை மாணவ-மாணவிகளின் கல்வி செயல்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக புதிய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த தளத்துடன் மாணவ-மாணவிகளின் பெற்றோரை இணைத்து அதில் கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (எமிஸ்) பதிவாகியிருக்கும் பெற்றோர், மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களை சரிபார்க்கும் பணிகளை கல்வித்துறை முடுக்கியுள்ளது.

கிட்டத்தட்ட 1 கோடியே 25 லட்சம் செல்போன் எண்கள் எமிஸ் தளத்தில் இருப்பதாகவும், அதில் இதுவரை சுமார் 82 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.அவ்வாறு சரிபார்க்கப்பட்ட எண்கள் பள்ளிக்கல்வித்துறை கொண்டுவர உள்ள வாட்ஸ்-அப் செயலி வாயிலான புதிய தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இணைக்கப்பட்ட எண்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும்பட்சத்தில் அதில் இந்த புதிய தளம் செயல்பட தொடங்குகிறது.

அதன்படி, பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் எண்ணில் ''டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்'' என்ற பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டு, கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன் இல்லாத பெற்றோர், குறைந்த விலையில் அதனை வாங்கி, கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story