திண்டுக்கல்லில் நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்துமிடம்


திண்டுக்கல்லில் நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்துமிடம்
x
தினத்தந்தி 27 Sep 2023 11:30 PM GMT (Updated: 27 Sep 2023 11:30 PM GMT)

திண்டுக்கல்லில் நடந்த சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்துமிடம் அமைக்க கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமார் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குற்றங்கள், சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர் பூங்கொடி பேசியதாவது:-

பொதுமக்கள் பாதுகாப்பாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இதேபோல் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க வாகன போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். திண்டுக்கல்லில் முக்கிய சாலைகளில் நெரிசலை தவிர்க்க இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும். பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் விபத்துகளை தடுப்பதற்கு முக்கிய இடங்களில் வேகத்தடைகள், தடுப்புகள் அமைத்து, ஒளிரும் பட்டைகள் வைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது அவசியம். மேலும் சாலை விதிகளை கடைபிடிக்காத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story