சாலைகளின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


சாலைகளின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
x

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைத்து வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story