சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

வெறையூர் அருகே சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வெறையூர் அருகே சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடிக்கடி விபத்துகள்

திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை பகுதியில் இருந்தும் வெறையூர் பகுதிகளில் இருந்தும் வரும்போது வளைவு பகுதியில் சாலை மிகவும் சேதமான நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதனை சீரமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் 2 விபத்துகள் ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் படுகாயம் அடைந்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சேதமான சாலையினால் தொடர்ந்து விபத்து ஏற்படுவது மட்டுமல்லாமல் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தும் இதுவரை சீரமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருக்கோவிலூர் சாலையில் தென்மாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வெறையூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் சீரமைக்க வேண்டும் என்று சாலை விரிவாக்கம் செய்யும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் தென்மாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கினர். இதில் சிறுவன் உயிரிழந்தான். 2 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே சேதமான சாலையை சீரமைப்பது மட்டுமல்லாமல் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சாலை சீரமைக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து சாலையில் இருந்த மரங்களை போலீசார் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story