ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்


ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்
x

ஆயுத பூஜைக்கான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.

பெரம்பலூர்

இன்று ஆயுத பூஜை

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு ஆயுதபூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து, வழிபாடு நடத்துவார்கள்.

இதை முன்னிட்டு பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, சங்குபேட்டை ரோவர் வளைவு, பாலக்கரை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நேற்று நடந்தது. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

சுவாமி படங்கள்

சரஸ்வதி உள்ளிட்ட சுவாமி படங்களும் சாலையோர கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பழைய பஸ் நிலையம் அருகே அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நேற்றே ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை பொருட்களின் விலை நேற்றை விட இன்று(திங்கட்கிழமை) சற்று அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராகவே நடந்தது.


Next Story