குமரி வனப்பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை-வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு


குமரி வனப்பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை-வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 6:37 AM GMT (Updated: 11 Jun 2023 8:51 AM GMT)

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

ஜூன்.

கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் பிரத்யேக லாரி மூலம் அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

அரிக்கொம்பன் யானை விடப்பட்ட பகுதியானது குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு மேல் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் முத்துக்குழிவயல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இதன் காரணமாக அப்பர் கோதையாறில் இருந்து அாிக்கொம்பன் யானை குமரி மாவட்ட வன பகுதிக்குள் நுழைந்து காணி மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே யானையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதாவது அரிக்கொம்பன் யானையின் காதில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோகாலர் எனப்படும் எலக்ட்ரானிக் கருவியை பயன்படுத்தி ஜி.பி.எஸ். மூலம் வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அரிக்கொம்பன் யானை குமரி மாவட்ட பகுதியான குற்றியாருக்கு வந்துள்ளது. இதுபற்றி வன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "அரிக்கொம்பன் விடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் பகுதிகளில் தான் சுற்றி வருகிறது. தற்போது குற்றியார் வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றியார் பகுதி குமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். ஆனால் வனப்பகுதியாக பார்க்கும் போது களக்காடு வனச்சரகத்துக்குள் வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 40 வனத்துறையினர் முத்துக்குழிவயலில் முகாமிட்டு இருக்கிறார்கள். அரிக்கொம்பன் யானை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.


Next Story