திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

திருவள்ளூர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார். அவர் பொதுமக்களிடமிருந்து 320 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 88 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 57 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 34 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 52 மனுக்களும் இதற துறைகள் சார்பாக 71 மனுக்களும் என மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டன.

வெள்ளி பதக்கங்கள்

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கொடிநாள் வசூல் செய்து வழங்கிய 15 அலுவலர்களுக்கு முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பாக மாவட்ட கலெக்டர் வெள்ளி பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

அதனை தொடர்ந்து தையல் எந்திரம் வேண்டி மனு வழங்கிய 9 நபர்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் ஊரக வளர்ச்சி துறை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ.8 ஆயிரத்து 500 வீதம் 9 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.76 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான தானியங்கி தையல் எந்திரங்களை கலெக்டர் இலவசமாக வழங்கினார்.

முன்னதாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story