செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நாளை நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன் தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

குறைதீர் முகாம் நடைபெறவுள்ள கிராமத்தின் பெயர்

செங்கல்பட்டு-பேரமனூர்,

செய்யூர் -கடப்பாக்கம்,

மதுராந்தகம் -நல்லூர்,

திருக்கழுக்குன்றம் -ஈச்சங்கரனை,

திருப்போரூர்-சின்ன விப்பேடு,

வண்டலூர்-பாண்டூர்.

மேற்படி, நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Next Story