மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 326 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதைபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3.34 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 200 மதிப்பிலான தையல் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பிட்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, காஞ்சீபுரம் தனித்துணை ஆட்சியர் ரா.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story