ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு


ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
x

பெருங்களத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் சென்னையில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம்போல் இயக்கப்படும்.

மேலும் ஆம்னி பேருந்துகளில், சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.


Next Story