நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி


நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம்  கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி
x
தினத்தந்தி 23 April 2023 10:45 PM GMT (Updated: 23 April 2023 10:46 PM GMT)

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் முதல் ஆலையில் தற்போது தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் தினமும் சுத்திகரிக்கப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

தற்போது தென் சென்னை பகுதிக்கு மேலும் குடிநீர் தேவை அதிகரிப்பால் தமிழக அரசு தற்போது 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் 2-வது புதிய ஆலையை தற்போது உள்ள ஆலைக்கு பக்கத்தில் அமைத்து வருகிறது. இந்த புதிய குடிநீர் ஆலையில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளுக்கும் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா பகுதிக்கும் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்ட உள்ளது.

இதையடுத்து தற்போது நெம்மேலி கிழக்கு கடற்கரையில் இருந்து தென் சென்னைக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகள் வரை குடிநீர் கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டன. தற்போது இந்த 2-வது குடிநீர் ஆலைக்கு கடலில் இருந்து கடல் நீர் கொண்டு வருவதற்காக கடலில் மிதவை படகு மூலம் எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு கடலில் 50 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நவீன தொழில்நுட்ப முறையில் நடந்து வருகிறது.


Next Story