ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பரிதாபம்; சேலை கழுத்தை இறுக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி


ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பரிதாபம்; சேலை கழுத்தை இறுக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
x

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். பெயிண்டர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு மணிகண்டன் (வயது 15), செல்வா (12) என 2 மகன்கள். இவர்களில் 2-வது மகனான செல்வா, ஒக்கியம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை செல்வா, வீட்டில் இருந்த தனது தந்தைக்கு கண்ணில் மருந்து ஊற்றி விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டின் வாசலில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது தவறுதலாக ஊஞ்சல் கட்டி இருந்த சேலை, மாணவன் செல்வாவின் கழுத்தை இறுக்கியது. இதில் பேச்சு மூச்சு இன்றி மயங்கி விழுந்தான். சத்தம் கேட்டு எழுந்த வேலாயுதம் வெளியே ஓடிவந்து பார்த்தார்.

பின்னர் மகனை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் செல்வா, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story