வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்


வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்
x

வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பெரம்பலூர்

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

வங்கி சேவைகள்

பணப் பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல், வங்கிச் சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் வருமாறு:-

பணப்பறிமாற்றத்தில் காலதாமதம்

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த சவுக்கு மற்றும் தைலமர வியாபாரி கோவிந்தசாமி:- வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட்டால் எங்களை போன்ற வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும். வாரத்தின் இறுதி நாட்களில்தான் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து விவசாயிகள் மற்றும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவோம். மேலும் விவசாயிகளின் வயல்களில் இருந்து பெறப்படும் சவுக்கு மற்றும் தைலமரங்களுக்கு கணக்கு பார்த்து பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் செயல்பட்டால் பணப்பரிமாற்றத்தில் காலதாமதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

காத்துக்கிடக்கும் நிலை

விரகாலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை பவானி:- இந்த விடுமுறை வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிரமமாகவே இருக்கும். தற்போது இருக்கிற நிலையிலேயே எந்த நேரம் வங்கிக்கு சென்றாலும், வரிசையில் காத்துக்கிடந்து வேலைகளை முடித்து வர வேண்டியதாக உள்ளது. இதில் மேலும் ஒரு நாள் வங்கி விடுமுறை என்றால் தினமும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக திங்கட்கிழமை வங்கிக்கு சென்றால், படாதபாடு பட வேண்டி இருக்கும். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் பள்ளி விடுப்பு நாளான சனிக்கிழமை அன்று, வங்கி வேலைகளை முடித்துக் கொள்வோம். சனிக்கிழமை வங்கியும் விடுப்பு என்றால், பள்ளி நாட்களில் விடுப்பு எடுத்து வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும்.

புத்துணர்ச்சி அளிக்கும்

வங்கி ஊழியர்களின் கருத்து வருமாறு:- வார நாட்களில் வங்கி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான பரிவர்த்தனைகள் முடிவடைந்த பிறகு இரவு 8 மணி அல்லது 9 மணி வரை தொடர்ந்து பணியாற்றி, ஒவ்வொரு நாளும் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். ஒவ்வொரு நாளும் வங்கி அலுவலக நேரம் மட்டுமல்லாது கூடுதலாக 5 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றி வீட்டிற்கு செல்வதால் மன நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வங்கிப் பயனாளர்களுக்கு தற்போது பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்றமடைந்து விட்டது. பொதுத்துறை, தனியார் வங்கி ஏ.டி.எம்.கள் கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இயங்கி வருகிறது. எனவே வாரத்தில் 2 நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரம் ஒவ்வொரு நாளும் மனச்சுமையோடு வீட்டிற்கு செல்லும் எங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டால் குடும்பத்தோடு எங்களது நேரத்தை செலவிடுவதற்கு உதவியாக இருக்கும். இது எங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள்.


Next Story