பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவி பாலியல் பலாத்காரம்;பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது


பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவி பாலியல் பலாத்காரம்;பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
x

பெரம்பலூரில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பாலியல் பலாத்காரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்துள்ள 16 வயதுடைய மாணவிக்கு, 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாணவியின் தந்தை கடந்த 12-ந்தேதி மாவட்ட குழந்தை உதவி மையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதற்கு மறுநாள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை மீட்டு குழந்தைகள் தொண்டு அறக்கட்டளையில் தங்க வைத்தனர். அங்கு மாணவியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பெந்தகொஸ்தே திருச்சபையின் அருள்தந்தை (பாதிரியார்) வேலாயுதம் ஸ்டீபன் (53) என்பவர் வீட்டில் தங்கியிருந்து, வயல் வேலை செய்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியை பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தந்தை மாணவியை கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் மாணவி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

சொத்து பிரச்சினை

மாணவியை, அவருடைய மாமா மகன் காதலித்து வந்துள்ளார். மாணவியின் குடும்பத்தினருக்கும், அவருடைய மாமா மகன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளதால், இதனை மாணவியின் தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி மாமா வீட்டிற்கு வந்த மாணவியை 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று மாமா மகன் குடும்பத்தினர் கூறி, மாணவியை அங்கேயே தங்க வைத்துள்ளனர்.

கடந்த 8-ந்தேதி மாணவியை, மாமா மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் ஒருவர் நேற்று முன்தினம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன், மாணவியின் தந்தை, மாமா மகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் வேலாயுதம் ஸ்டீபன், மாமா மகனை நேற்று கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story