வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஏட்டு சஸ்பெண்டு..!


வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஏட்டு சஸ்பெண்டு..!
x

வேலூர் ஜெயிலில் கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பேட்டரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர்:

வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சிறைக்காவலர்கள் அவ்வப்போது மேற்கொள்ளும் சோதனையில் கைதிகளின் கழிவறைகள் மற்றும் பூங்கா பகுதியில் மறைத்து வைக்கப்படும் கஞ்சா செல்போன் பறிமுதல் செய்யபடுகிறது.

இந்த நிலையில் ஜெயிலில் தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தி வருவது தெரியவந்தது. நேற்று கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பேட்டரி ஆகியவற்றை ஜெயில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப் படுகிறது. இதனையும் மீறி கஞ்சா செல்போன் ஆகியவை எப்படி வந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டது. சிறையில் காவலர்கள் உதவி இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வர முடியாது என்பதால் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது வேலூர் ஜெயிலில் பணியாற்றிவரும் முதன்மை ஏட்டு விஜயகுமார் என்பவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஏட்டு விஜயகுமாரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இவர் இதுவரை எவ்வளவு கஞ்சா சப்ளை செய்துள்ளார், மேலும் செல்போன் சப்ளை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story