தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு


தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு
x

வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விநியோகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் இன்று தொடங்குகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

"பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும். 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.இரண்டு 500 ரூயாய் தாள்களை மட்டுமே வழங்க வேண்டும். பயனாளர்களை வேறு தேதிக்கு வாருங்கள் என சொல்லக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு அளிக்கப்படவுள்ளது. இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியவற்றுடன் முழு நீளக் கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பரிசுத் தொகுப்பை அளிப்பதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமாா் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.


Next Story