மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கை: விழுப்புரம் கோர்ட்டில் ஜிப்மர் குழு தாக்கல்


மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கை: விழுப்புரம் கோர்ட்டில் ஜிப்மர் குழு தாக்கல்
x

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழு, தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த மாதம் 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்த முடிவு மற்றும் மறுபிரேத பரிசோதனை செய்த முடிவுகளை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மூலமாக கடந்த 1-ந் தேதியன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அக்குழுவினர் தங்கள் ஆய்வை தொடங்கினர்.

இக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்த நிலையில் அந்த ஆய்வு முடிந்ததும் அதனை அறிக்கையாக தயார் செய்தனர். இந்த ஆய்வறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

இந்த ஆய்வறிக்கையை பொறுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மேலும் கூடுதலாக சில வழக்குப்பிரிவுகளை சேர்க்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு இவ்வழக்கு தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி ஓரிரு மாதங்களில் போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தற்போது இவ்வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


Next Story